திடீரெனத் திரையும் திறந்திடத்
திடுக்கெனத் திகைத்தான்
முழுவதும் கண்டதும் முழித்தான்
கற்பனைச் சேலை கொடுத்தான்
கலங்கியபடி கடவுளை அழைத்தான்
பாராததைப் பார்த்ததும்
பாவைக்கு பார்த்தவன் பார்த்தனானான் - அவள்
மனப்பூவைக் கோர்த்தனானான்
தாயின் தங்கையின் தோழனின்
தாள்பணிந்து தங்கமவள் தரமுறைத்து
தோள்பற்றித் தலைவனானான் - அவள் தஞ்சத்தில்
தொலைந்து போனான்
ஆமகன் நிலமொன்று இருந்தது
ஆக்களின் நிலமாய் இருந்தது
ஆதியிலிருந்தே இருந்தது - அதில்
ஆவியாய் தந்தையுயிர் திரிந்தது
நண்பனின் தந்தையோ பொல்லாதவன்
நல்வழிப் பாதையே செல்லாதவன்
நல்லதாய் ஒருமொழி சொல்லாதவன்
நன்றியைக் கடுகுக்கும் கல்லாதவன்
மந்திர விடமெனும் விதையைத்தான்
மகனின் மனத்தில் விதைத்தான்
மகனும் மண்தேடி விரைந்தான்
மண்மகன் கண்தேடி விழைந்தான்
தன் லாபத்துக்காய் இல்லாமல்
நண்பனின் ரூபத்துக்காய்ச் சம்மதித்தான்
ஒன்றுமில்லா வானத்தில், வட்டநிலா விளைந்ததுபோல்
வார்த்தையொன்றுமில்லாக் காகிதத்தில்
கைவிரல் பொதிந்து தந்தான்
நாளும் நகர்ந்தது
நண்பனின் கட்டிடம் உயர்ந்தது
அன்றுதான் திறப்புவிழா - நண்பனின்
வாழ்வில் சிறப்புவிழா
செல்வரும் வந்தார் - அரசியல்
கள்வரும் வந்தார்
கள் தரும் பணத்தைக்
கொள்வரும் வந்தார்
இல்லாதான் இவனொருவன்தான்- கர்வம்
இல்லாதான் ஒருவனேதான்
எல்லார்முன்னும் தெரியாமலிருக்க
பொல்லார் செய்தார் ஒருவேலை
அழுக்கு மனம் கொண்டவர்
அழுக்கு செய்தார் தரையை
இழுக்கு வரும் நண்பனுக்கென்று
இழுத்துவந்து துடைக்கச்செய்தார் இவனை
ஆசையாய்த்துடைத்தான் இவனும்
பூசைக்கடவுள் இருப்பிடம்போன்று
மேசைக்குப் பக்கத்தில் கேட்டான் பேச்சு
மீசை துடித்தது அவனுக்கு
மாளிகைக்குப் பக்கத்தில் குடிசை ஒவ்வாதாம்
நாழிகைக்குள் காலிசெய்ய அவர்செய்யும் ஏற்பாடாம்
தூரிகைக் காகிதமோ சட்டென்று கிழித்தெறிய?
காரியத்தைக் கேட்டதுமே கோபத்தில் கேட்டும்விட்டான்
நண்பனின் தந்தைக்கும் இவனுக்கும் வாதம்
அன்பில்லை யாதலால் நட்புக்குச் சேதம்
ஒருநொடியில் மனம் பிறழ்ந்தான்
ஒருகணமே அறிவிழந்தான்
கார்காலக் கறுவிருட்டில்
பார்த்தாலே மறைகின்ற மின்னலென
தன்கரம் அவர்கன்னம் அறைந்துவிட
தானே அதிர்ச்சியில் அதிர்ந்து நின்றான்
தந்தையின் அவமானம் தான்கண்டு நண்பனும்
சிந்தையில்லாமலே அவனை அறைந்தான்
கந்தையுடுத்தும் நிலையிலும் விடாத நண்பனை
விந்தையுடன் பார்த்து வெளியேறினான் வெண்மனத்தான்
பீடுவந்தான் ..... வீடுவந்தான்
தன்வில்லே தனைத்தாக்கிய வேடுவன்தான்
முகம்புதைக்கத் தாய்மடியைத் தேடிவந்தான்
நண்பனுக்கோ கோபமின்னும் ஆறவில்லை
தந்தைபட்ட அவமானம் மாறவில்லை
மண்வீடு..அந்த மன்வீடு..அதைத்
தன்வீடாய்க் கருதிய பொன்வீடு
தந்தையின் துயர்போக்க இடிக்கத் துணிந்தான்
தன் நட்புக்கு இரங்கல் படிக்கத் துணிந்தான்
....தொடரும்
-சகி
Don't finish this so fast.. Excellent Sathish..
ReplyDelete- Senthil
This subject is not gripping... Maybe I'll comment when you post a new creation of yours.
ReplyDeleteபாவைக்கு பார்த்தவன் பார்த்தனானான்
ReplyDeleteevan parthana illai avan sarathya endru thigaikalanaal
வருகைக்கு நன்றி. நல்ல கற்பனை.
Delete