Sunday, November 13, 2016

அண்ணாமலை - பாகம் 4

முன்பொருநாள்..... 

காரும்  சிலபேரும்  திடீரென  வந்தனர் 
ஆக்களை  அவிழ்த்தனர் 
சாணத்தையும்  வைக்கோலையும்  சுத்தஞ்செய்தனர் 
கொடிகளும்  சுவரொட்டிகளும்  வைத்து  அசுத்தஞ்செய்தனர் 

சிலைபோலானான்  மலை... 
ஆர்செய்ததிதென்றான்.. 

வாக்குகேட்டு  வந்து  வென்று 
போக்கு  தெரியாமல்  போய் 
தேக்கி  வைத்த  பணமெண்ண  
  நேரமில்லா  நேர்மையில்லா 
போக்கிரியென்  றரிந்தான் 

தன்  நாலுகால்  நண்பர்கள்  புடைசூழ 
அம்மா  வீடுவிட்டு 
அம'¢மா'வீடு  புகுந்தான் 

எங்கும்  பணநெடி..பொறுத்தான்  ஒருநொடி.. 
அவிழ்த்தான்  நண்பர்களின்  கண்டக்கொடி.. 

அம்மா  அம்மா  வென்ற  பாசக்குரல்கள் 
வீடெங்கும்  ரீங்காரமிட்டது 

"ஆரடா  என்  வீடு  புகுந்தது 
 வீடுபுகுதலென்  வேலையல்லவா"  வென்று 
 கோரக்  குரலோன்  கோரினான் 

இழைத்துச்  செய்த  தேக்குப்  படிக்கட்டும் 
 அழைத்துச்  செய்த  காஷ்மீர்  கம்பளமும் 
பிழைப்புக்காய்  பால்கறக்கும்  இல்லாதவன்  மாடுகளால் 
குழைந்தே  போயின  சாணமும்  கோமியமும் 

ஆத்திரமடைந்தான்  இருபது  மோதிரத்தான்.... 

"ஆரிடம்  மோதினாய்  தெரியுமா 
 பேருடன்  இருக்கும்  நானுனை  என்ன  செய்வேனென்று 
 ஆரூடம்  கேட்டால்தான்  புரியுமா"  என்று 
 வேருடன்  பிளந்த  ஆல்போல்  ஆர்ப்பரித்தான் 
 
எதிரேயிருந்தது  மணல்  குன்றல்ல..
அனல்  குன்று ..
வெகுண்டெழுந்தது 

"பேரும்  பணமும்  காரும்  தனமும் 
ஊருள்  இருப்பதால்  பெரிதா  நீ? 
ஐந்தாண்டுக்கொரு  முறையெமையே  காண  
ஊருள்  வருவதால்  அரிதா  நீ?" 

படித்துப்  பிழைத்தல்  ஒருவகை  -  விதை 
வெடித்துப்  பிழைத்தல்  ஒருவகை-  புகை 
மடித்துப்  பிழைத்தலும்  ஒவ்வும்-  ஏழைமடி 
யடித்துப்  பிழைத்தல்  பிச்சையினும்  கீழ்மையே 

பணம்செய  ஆயிரம்  வழியுண்டு-  புனித 
அரசியல்  ஏனுனக்கு?? 

என்வழியில்  நான்செல்ல,     
சேதமேன்  அன்புக்கிழைக்கிறாய்? 
ஏனெனை  வம்புக்கிழுக்கிறாய்? 

என்  நண்பர்களால்  பால்  இயலும் 
அதனால்  எனக்கு  அரிசி  இயலும் 
இதைவிடுத்து  வேறொரு  அரசியலும் 
எனக்கு  வேண்டாம்  எனைவிடுங்களென்றான் 


காலணி  கொண்டு  காதணி  யருகே 
காதலின்றி  அறைந்தாற்போலிருந்தது... 

திரும்பாக்  குழந்தை 
திரும்பத்  திரும்பத் 
திரும்பும்  முயற்சிபோல் 
திருந்தாதான்  மனத்தில் 
திரும்ப  ஒலித்தன  அவ்வார்த்தைகள் 

மறுநாள்.. 
ஊரில்  கொள்ளையடித்தவன் 
வேரில்  வௌ¢ளையடித்திருந்தான் 
காரிலேறி  ஆயில்  வந்தான்-  நல்வார்த்தை 
ஈதவனை  ஈன்றவளிடத்தே  வந்தான் 

பெற்றாலிவன்  போல்  மகன்வேண்டும் 
தொழுவமிருக்கும்  இக்கோயில்  தெய்வமுன்னைத் 
தொழுதால்  தகுமென்றான் 
அதிகாலைப்  புல்நுனிப்  பனிபோல் 
அவள்கண்  பனித்தது... 

நல்லவனே....  உன்னால்  தேறினேன் 
மனிதனாய்  மாறினேன் 
உனக்கு  என்ன,  எப்பொழுது,  எங்கு  வேண்டுமானாலும் 
தயங்காமல்  கேள்  என்று 
சுட்ட  சங்காய்  சுடர்ந்தான்.. 
நிமிர்ந்த  நடையொடு  தொடர்ந்தான்..  

- சகி

Thursday, August 25, 2016

தைரியம்


தெரியாத சேதிகள் ஆயிரம் இருந்தும், நம் கண்ணைத் தராசாக்கி, கடிவாளப் பார்வைகொண்டு நாமே திடீர் நீதிபதிகளாகிறோம். நியாயங்கள் வழங்குகிறோம்.
சட்டையின் கிழிசல்களை வைத்து அடையாளங்கள் தைக்கிறோம்.
ஒட்டியுள்ள அழுக்கை வைத்து வரிசையில் நிற்க வைக்கிறோம்.

பெயரில் மட்டுமே செல்வத்தைக் கொண்டவனுக்கும், போலித் தெளிவு கொண்டவளுக்குமான ஒரு நிகழ்வே இப்பதிவு.





செம்மண் படிந்த தலையும்
செம்புக் கையணியும்
செருப்பில்லாக் காலும்
செல்வத்தின் அடையாளம்

தலைகுனிந்து நின்றான் செல்வம்
தவிர்க்கமுடியாமல்.
தளும்பிய கண்கள்
தடயம் காட்டின.

"எடுத்தியா இல்லையா?"
"எவ்வளவு தெரியுமா?"
"எங்கடா உங்க அப்பன்?"
எத்தனை கேள்விகள்
எதற்குமே விடையில்லை
எவரிடத்தும்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்

அகோரப் பசிபோல் வெட்கம்
அடங்காமல் பிடுங்கித் தின்ன
அடிபட்ட நாயாய் விம்மி
அப்படியே ஓடிப்போனான்

........................

வேகமாய் நடந்தாள்
வேர்வையின் துளிகள்
வேடிக்கை பார்க்க
வேகமாய் நடந்தாள்

இல்லாத நிலவு
இருட்டைப் பாய்ச்ச
இல்லாத நிழல்கள்
இருப்பதாய்ப் பயந்தாள்

தெருமுக்கில் கடையொன்று..
தெரிந்த கடைதான்..
தெரியத் தெரிய
தெம்பு பிறந்தது

சிகரெட்டுப் புகை சூழ
சினிமாக்கதை பேசி
சிரித்த குரல்கள்...
சிக்கனமாய் நடந்தாள்

கடைக் கண்களே
கடைசிக் கண்களாய்
கருத்தை உண்ணக்
கடகடத்தாள்....

கண்களும் முன்னே பார்க்கக்
கற்பனை பின்னே பாய
கறுப்பு வெளிச்சத்தில்
கரம்பட...... திகைத்தாள்

"கையைப் பிடிச்சிக்கோங்கக்கா"
 மையிருட்டில் ஒளிர்ந்தான் செல்வம்.

"எட்டு வயசில்
எத்தனை தைரியம்?"
எதற்கும் அலட்டாத தீபாவும்
எதிரொலித்தாள்...மனதுக்குள்


- சகி

Sunday, August 21, 2016

ஒரு நாள் ஒரு கனவு





ரிரவு உறக்கத்தில்
முடியாத கனவதனில்
தேடி முகங்களெல்லாம்
அவனது சாயல்...

குறும்புப் பார்வையுடன்
திவீரன் குதித்தான் முன்னே
இடரையெல்லாம் போக்கும்வண்ணம்

ன்பே, ஆருயிரே யென்று
செல்லம் கொஞ்சக் கன்னம்தீண்டி
காததன் விளக்கம் சொன்னான்

க்கணமும் என் கனவாம்
ழுப்பதெல்லாம் என் நினைவாம்
சுதந்திரமாய் இருக்கவிடு! கெஞ்சினான்..
எழுந்திருந்தால் கலைந்துவிடும்
என்று உருப்படியாய் தூங்கிப்போனேன்...


-சகி

நங்கைவிரல்







வெறுந்தட்டை வெறித்துப் பார்த்தான்
ண் ணமெல்லாம் அவள்வண்ணம்
கட் டை விரலதனை மெலிதாய்ப் பிடித்திழுத்து
கவிதை க் கு மயங்குதல்போல் ஓரத்தலையாட்டியது
நேற்றைக் கா ? இன்றைக்கா ? நினைவில் இல்லை
    'எனக்கு காய் வேண்டாம் அண்ணி", சொல்லிச் சிரித்தான்



சகி

அலைகள் ஓய்வதில்லை





யன்றதைச் செய்துவிட்டு
சையாமல் படுத்திருந்தேன்
ஆடையின் எடைகூடப் பாரமாய்
உயிரின் ஓசை ரீங்காரத்துடன்
ந்து விழுந்தது வானொலியில்
வாம் கூட உண்டா இசைக்கு?
நேரமா காலமா ஏதும் தெரியாமல்
ஒரு யோகிபோல் மனங்கொண்டு
நாதத்தில் மோட்சம் காண
நான் என்னை மறந்தேபோனேன்.



சகி

கவிபதி





பட்டெனக் கோபம் கண்டிரத்தலும்
சட்டெனக் கோதுமையிட்டுச் சமைத்தலும்
கட்டிய பொழுதிலே காதலிசைத்தலும்
மட்டுமே வாய்த்ததெனக்கொரு பேதைநான்

கட்டிய வேட்டியைக் கசக்கித் துவைத்தலும்
எட்டிய திசையெலாம் கடன்சொல்லி வாங்கலும்
கிட்டிய பாக்கியம் இதுவன்றி அவன்நெஞ்சு
முட்டிய கவிதையில் எனக்கென்றும் இடமில்லை

சகி


Monday, August 8, 2016

சுட்டபுண்












சுமாரான தோசையை இட்டுக்கொண்டிருந்தேன்
வட்டமும் சதுரமுமாய் கிழிசலுடன் சிரித்தது
கட்டம்போட்ட சட்டையுடன் அவனே நினைவில்வர
குறும்புடனே கிள்ளுவதாய் கல்லிலே கைவைக்கப்
பட்டபுண்ணைத் தடவியதில் மெல்லியதாய்ச் சுகவலி

பயணம்



காலைப் பணிக்குத் தவறாமல் தாமதமாய்
நாளைக் குறைகூறி வண்டியில் அமர்ந்திருக்க
வேலைப்பளுவதுவும் வெப்பமும் தலைசூழ
நாளைக்குத் தள்ளினேன் சின்னக்குழப்பத்தை

சிவப்பு விளக்கதனை முறைத்து நிறுத்தினேன்
காவலனாலன்றிக் காமத்தாலல்ல
பக்கத்து வண்டிகளும் அங்ஙனமே நிற்க
கவனம் திருப்பினேன் தொண்ணூறு நொடிகொல்ல

குடிசைக் கடைகள் வரிசையாய்
கடைசிக் கடையில் சனம் வரிசையாய்
கவரும், கூடையும், பையேந்தி நிற்கும்
கதரும், பேண்டும் , கைலியும் பனியனும்

வேர்வை துடைத்துத் தள்ளிப் பார்த்தேன்
பார்வையில் பட்டது கூண்டுக் கோழி

கதவு திறந்து அதன் கனவு அடைக்கப்பட்டது
கால்களும் கழுத்தும் பத்திரமாய் கரங்களுக்குள்

ஓலத்தை வாய்வழியும்
உயிர்பயத்தைக் கண்வழியும்
பதைபதைப்பைக் கால்களிலும்
பரபரப்பை றெக்கையிலும்
ஒருசேரத் தெரிவித்தது

கையில் பிடித்தவனுக்கு அது ஒரு சடங்கு
சமிக்ஞைகளை அவன் சட்டைசெய்வதில்லை

கத்தியைப் பார்த்தது கோழி
கத்தியும் கதறியும் பார்த்தது
விழிவிரித்து உலகைப் பார்த்தது
கத்தி இறங்குதற்கு இருநொடிமுன்னால்
விழிகள்மூடி அமைதியானது
விதியறிந்த முனிவன்போல

பச்சை விழுந்தது...
பயணம் தொடர்ந்தது

- சகி

Wednesday, June 15, 2016

ஞானச்சிரிப்பு





ஞாயித்துக்  கிழமையிலே
வாத்தைப் பாத்தபடி
யோசிச் சுப்   பாக்கும்போது
நான்  ரசிச்ச  பாட்டெல்லாம்
மொறையா தெரியாமபோனாலும்
கொறைய நிரப்புனது     போதாதா
என் ராசா   எம்புட்டு  அளகுடாநீ


- சகி 


Saturday, January 2, 2016

24 நாட்கள்


24 jours, la vérité sur l'affaire Ilan Halimi ( 24 Days: The True Story of the Ilan Halimi Affair)


மொழி : ஃப்ரென்ச்
இயக்குனர் : அலிக்ஸாந்த்ரே ஆர்கேடி
வருடம்: 2014



நிஜ சம்பவங்களை மையமாக வைத்துத் திரைப்படம் எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்றது. உள்ளதை உள்ளபடி காட்டினால் ஆவணப்பட சாயல் வந்துவிடும். சுவாரசியம் கூட்டுகிறேன் பேர்வழி என்று நடக்காததையெல்லாம் கூட்டினால், உண்மை தொலைந்து போகும். அதுவும் ஒரு உலகப் பிரபலமான சம்வத்தை, அண்மையில் நடந்தவற்றை, பாரீஸ் நகரமே கொதித்துக் கொந்தளித்த, உள்ளங்களை உலுக்கிய சம்பவத்தைத் திரைப்பட வடிவில் தருவது சாதாரண விஷயமல்ல.


பாரீஸ் நகரில் வசிக்கும் ஒரு நடுத்தர யூத குடும்பத்தைச் சேர்ந்த இலான் ஹலிமி, ஒரு செல்ஃபோன் விற்பனையாளன். அப்பா பிரிந்து சென்று இருபது வருடங்களாய், அம்மா (ரூத் ஹலிமி) தலைமையில் குடும்பம். அண்ணனும் அண்ணியும் தனியே வசிக்க, அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கையுடனும், தாயுடனும் அன்னியோன்யமான வாழ்க்கை. குடும்பத்துக்கு அறிமுகமான காதலி. சுயதொழில் செய்வது லட்சியம். அதற்கு அப்பாவின் கையை எதிர்பார்க்காத சுய கவுரவம்.

ஒரு நாள் இரவு, ஷப்பாத் உணவுக்குப் பின்னர் அன்று காலையில் அறிமுகமான அழகுப் பெண்ணின் அழைப்பு வர, சபலத்தில் புறப்படுகிறான். அம்மா அவனுக்காய் வாங்கி வந்திருக்கும் புதுக் காலணியைப் போட்டுப் பார்க்கவும் பொறுமையின்றி செல்கிறான்.


மறுநாள் வரை திரும்பாததால் குடும்பத்தார் கவலைப்பட ஆரம்பிக்கின்றனர். அவன் காதலி தனக்கு வந்த மின்னஞ்சலைத் திறக்க முடியாமல், இவன் வீட்டுக்கு அழைக்கிறாள். இலானின் அண்ணனின் உதவியுடன் திறந்தால், முகமெல்லாம் பசைநாடாவுடன் ( gum tape) , இலானின் முகம். கூடவே ஒரு மிரட்டல் செய்தி- உடனடியாக 450,000 யூரோக்கள் செய்யாவிட்டால் கொன்றுவிடுவோமென்று.

பிரிந்து வாழும் தந்தைக்கும் இதே மிரட்டல் வர, கமாண்டண்ட் டெல்கூர் தலைமையிலான காவல் துறையை அணுகுகிறார்கள். தொடர்ந்து வரும் கொலை மிரட்டல் அழைப்புக்களை எதிர்கொள்ள , உளவியல் மற்றும் குரல் ஆய்வாளரான சில்வி டெஸ்டூடை குழுவில் இணைக்கிறார்கள். மிரட்டல் அழைப்புகள் ஃப்ரான்ஸின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் ஐவரி கோஸ்ட் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் வருவது கண்டு திகைக்கின்றனர்.மேலும் கடத்தியவர்களின் கோரிக்கைகள் மற்றும் மீட்புப்பணம் (450, 50, 150 என்று) மாறிக் கொண்டே இருக்கிறது கண்டு திகைத்துப் போகிறார்கள். மேலும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காய், இலானின் தந்தையான டிடியர் ஹலிமி, இவர்கள் பக்கத்திலிருக்கும் பிரதான பேச்சுவார்த்தையாளராகிறார். தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.

காவல் துறையின் பல முயற்சிகளும் பலனளிக்காது போகவே, இலானின் குடும்பம் (காதலி, தங்கை மற்றும் தாய்) அவர்கள் மேல் நம்பிக்கை இழக்கிறது. செய்வதறியாது துடிக்கிறது. நெஞ்சு வெடிக்கிறது. கேள்விகளாய், வாதங்களாய், கெஞ்சல்களாய் தங்கள் இயலாமையையும் ஆற்றாமையையும் கொட்டுகிறார்கள்.

கடத்திய கூட்டத்தின் தலைவனான ஃபோஃபானா காட்டு மிருகமாக அறிமுகமாகிறான். டிடியருடன் அவன் நடத்தும் பேச்சு வார்த்தைகள் ( 20 நாளில் 600 முறை) ஒவ்வொன்றும் அரை நிமிடத்திற்குள்ளேயானாலும், ஒரு முட்டாள்தனமான ஆவேசம். அதன் காரணமாகவே அவன் என்னவும் செய்யக்கூடும் என்ற அச்சம். அவன் ஆட்களை அவன் கட்டுக்குள்ளே வைத்திருந்தாலும், பல நாட்களாய் ஒன்றும் செய்யாது இலானை ஒரு கட்டிப் போட்ட பொட்டலமாக காப்பதினால் அவர்களும் பொறுமையை இழக்கின்றனர்.

இலானின் குடும்பம், காவல் துறை , கடத்தல் கும்பல் என்ற முக்கோணப் பார்வையில் செல்கிறது படம். இது தீர்க்கப்பட்ட வழக்காதலால், குற்றக் களத்தின் கூற்றையும் முழுதாகக் காட்ட முடிகிறது. கதையின் ஒரு எழுத்தாளர் இலானின் தாயான ரூத் ஹலிமி என்பதால் குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளையும் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்.

கில்ஸ் ஹென்ரியின் கேமரா கோணங்கள், வண்ணங்கள், டோனி எக்ரியின் கலை வடிவமைப்பு மற்றும் எரிக் பெர்ரோனின் ஆடை வடிவமைப்பு எல்லாமே கதாபாத்திரங்களின் மனநிலை நீட்சியாகவே தெரிகின்றன.



எல்லோருமே அவரவர் பாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், ரூத் ஹலிமியாகவே உலாவி நம் விழியோரத்துக் கண்ணீருக்கும், கைதட்டல்களுக்கும் முழுச் சொந்தக்காரியாகிறார் சீஸர் விருது வென்ற சபூ ப்ரெய்ட்மன். மகன் தொலைந்து இருபது நாட்களாகியும் சேதி தெரியாத நிலையில், ஷப்பாத் அன்று காவல் துறையை வீட்டுக்குள்ளிருந்து துரத்தும் கணத்தில் கண்ணில் தெரியும் ஆவேசம், கணவனுடன் மன்றாடும்போது அதே கண்ணில் கெஞ்சல், ஃபோஃபானாவை கையருகில் நழுவவிட்டதும் டெல்கூரிடம் காட்டும் அலட்சியம் என்று தூள் பரத்தியிருக்கிறார்.


நிஜ வாழ்வில் நடக்கும் பலவும், கதைகளைவிட விசித்திரமானது என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். வாய்ப்பும் நேரமும் கிடைத்தால், நிச்சயம் பாருங்கள்.


குறிப்பு:

ஷப்பாத்: யூத மரபின்படி ( ஹலக்கா) - வெள்ளியன்று சூரிய அஸ்தமனத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் தொடங்கி, சனியன்று மாலை வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரை ஷப்பாத் கடைபிடிக்கப்படுகிறது. யூத நம்பிக்கையின்படி உலகையும் உயிர்களையும் ஆறு நாட்களில் தோற்றுவித்த இறைவன், ஏழாம் நாள் எடுத்த ஓய்வின் குறியீடாக ஷப்பாத்தை பார்க்கின்றனர். ஷப்பாத்தின் போது வேறு வேலைகளில் ஈடுபடாமல் ஆன்மீக விஷயங்களிலும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் பயன்படுத்துகின்றனர்.


- சகி