Monday, December 28, 2015

ஓநாய்களுடன் தனியே

Nackt unter Wölfen  ( Naked Among Wolves)


ஹோலோகாஸ்ட்( Holocaust) .  இவ்வார்த்தையைக் கேட்டாலே உங்கள் உடம்பில் ரத்தம் உறையும் அதிர்ச்சி ஏற்படவில்லையென்றால், நீங்கள் கீழ்வரும் படங்களைப் பார்த்திருக்க நியாயமில்லை. 

(1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் ( Schindler's List)
(2) தி பியானிஸ்ட் ( The Pianist)
(3) லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் ( Life is Beautiful)
(4) தி பாய் இன் தி ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ் ( The Boy in the Striped Pyjamas)
(5) தி க்ரே சோன் ( The Grey Zone)

ஹோலோகாஸ்ட் பற்றிய சிறுகுறிப்பு
  1941 முதல் 1945 வரையிலான ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் ஹிட்லரின் நாஜி படைகளால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.  இதற்கு அப்பாலும் - கம்யூனிஸ்டுகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் , வயது முதிர்ந்தவர்- என்ற வரிசையில் ஒரு 50 லட்சம் கூட்டிக்கொள்ளவும்.  ரயில்களில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் சென்று, சித்ரவதை முகாம்களிலும் மரண முகாம்களிலும் அடைத்து,
உயிர் பிரியும் வரையில் வேலைகள் பிழிந்து, சொற்ப உணவளித்து, சதையெல்லாம் ஒட்டி எலும்புகள் புடைத்துக்கொண்டு, சாவை கண்களில் தேக்கித் திரியும் ஜீவன்களாய் மாற்றி, நினைத்த நேரத்திற்கெல்லாம், நினைத்த காரணத்துக்கெல்லாம் சுட்டுத் தள்ளி ஒரு இனத்தை நாஜிக்கள் ஆடிய மரண வேட்டையே ஹோலோகாஸ்ட்.

அடைத்து வைக்கப்பட்ட மக்களில், தங்களுக்கு விசுவாசமானவர்களையும் உடல் வலிமையுள்ளவர்களையும், காபோக்களாக ( Kapo) தெரிவு செய்து, அவர்களைக் கண்காணிக்க வைத்தனர். சற்றே தரமான உடையும் உணவும் மற்ற சௌகர்யங்களும் கிடைத்தாலும், தங்களினத்தவரையே நாளுக்கு நாள் சித்ரவதை செய்யும் ஒரு கொடூரமான வாழ்க்கை அவர்களுக்கு.

மனதைப் பிழியும் இந்தப் பின்னணியில் வரும் எந்தப் படத்தைப் பார்ப்பதற்கும் மனோதைரியமும் புரிதலும் மிக முக்கியம்.  அதில் நேர்ந்த ரத்தத்தையும் கோரத்தையும் காட்டாமலேயே நெகிழ வைத்த - லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்- தனித்துவம் வாய்ந்தது. ஆனால் 
ஹோலோகாஸ்ட் பற்றிய புரிதலில்லாமல் அந்த நெகிழ்வை உணர்தல் அரிது, 


நேகட் அமங் உல்வ்ஸ்
இவ்வரிசையில் வந்திருக்கும் ஒரு தரமான படைப்பாக - நேகட் அமங் உல்வ்ஸ் ( Naked Among Wolves) - 2015ல் வெளிவந்திருக்கும் ஜெர்மானிய மொழித் திரைப்படம்.  1958-ல் இதே பெயரில் வெளிவந்த ப்ரூனோ அபிட்ஸின் நாவலைத் தழுவி ஃபிலிப் காடெல்பாக் இயக்கி இருக்கிறார். 1963-ல் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்திருக்கிறது. 


இரண்டாம் உலகப் போரின்போது, 1944 மற்றும் 1945 ஆண்டுகளில் புசென்வால்டு முகாமில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் நகர்கிறது கதை. தன்னுடைய கம்யூனிச நடவடிக்கைகளினால், புசன்வால்டுக்கள்  தன் தந்தையுடன்  அடைக்கப்படுகிறான் ஜெர்மானியனான பிப்பிக். 

 அங்கு கொண்டுவரப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில், போலந்தைச் சேர்ந்த ஒரு யூதன் ஒரு பெட்டியைக் கொண்டுவருகிறான்.  மேற்பார்வை செய்யும் காபோ எவ்வளவு சொல்லியும், பெட்டியைப் பிரிய மனமில்லை அவனுக்கு. வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து, அப்பெட்டியை உள்ளே எடுத்துச் செல்லும் பிப்பிக், பிரித்துப் பார்க்கையில், உள்ளே மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.  கணக்கில் பதிவு செய்யப்படாத, ஜெர்மானிய மொழி பேசாத அந்தச் சிறுவனை ஒளித்து வைக்கிறான். தன் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பகிர்கிறான். 

அங்குள்ள கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய S.S படையைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்.  அத்திட்டம் நிறைவேறும் வரையில் அவர்களுக்குப் பணிந்து போவது போன்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் அக்குழந்தையைப் பதுக்கி வைப்பது அவர்கள் திட்டத்துக்கே சேதமாக முடியுமென்பதனால் சற்று யோசிக்கிறார்கள். ஆனது ஆகட்டுமென்று காப்பாற்ற முடிவு செய்கிறார்கள். 

(1) எப்படியாவது அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தீர்த்துக் கட்டத் துடிக்கும் S.S அதிகாரிகள்
(2) தனது ஆயுதப் போரட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் கம்யூனிஸ்ட் காபோக்கள்
(3) யார் கண்ணிலும் படாமல் குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் பிப்பிக் மற்றும் அவன் சகாக்கள்
(4) தன் தந்தையின் உயிர்கொல்லி நிலைமைக்கு ( Gangrene) மருந்து வாங்குவதற்காய் எதையும் காட்டிக் கொடுக்கும் நிலைமையில் ஒருவன்

இன்னும் பல கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் Cat and Mouse Game தான் இந்தத் திரைப்படம்.

 குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படம் உகந்ததல்ல. 


நெகிழவும் உறையவும் வைக்கும் பல காட்சிகள் படமெங்கும். 

(1) நாள் முழுக்க வேலை செய்துவிட்டு புறாக்கூண்டுப் படுக்கையறையில் படுத்திருக்கும் அவன் பக்கத்து ஆள், தன் வாயில் ஒளித்து வைத்திருக்கும் பழத்துண்டை எடுக்கிறான். எச்சிலூறிய அத்துண்டில் இவனுக்குப் பங்கு வேண்டுமாவென்று கேட்கிறான்.  வேண்டாமென்ற இவன் பதிலை பொருட்படுத்தாமல், சாப்பிடுபவர்களைப் பற்றிய தத்துவமொன்று உதிர்க்கிறான்.

(2)  மொழி புரியாத குழந்தை அவர்களின் வாக்குவாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பேச்சினூடே அவர்கள் S.S என்று கூற, மின்னலென பெட்டிக்குள் மறைந்து மூடிக்கொள்கிறது.

(3) பெட்டிக்குள் உறங்கும் குழந்தையின் வடிவம்கண்டு தன் கர்ப்பிணி மனைவியை நினைவுகூறும் பிப்பிக்.

(4) தன் கையில் குழந்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு கதைசொல்லியபடியே கூட்டத்துடன் முகாமை விட்டுச்  செல்கிறான் அக்கிழவன்.  பதிலேதும் கிடைக்காததால், சந்தேகத்துடன் திறந்துபார்க்க,  கம்பளியும் சட்டைகளும் கீழேவிழ, அக்கணமே உயிர்போய்விட்ட உணர்வில் அவன் நிற்க, சாத்திரத்துக்காய் ஒரு காவலாளி அவனைச் சுட்டுத்தள்ள, மெல்லிய குரலில் ஒரு தாலாட்டு - உள்ளே ஒரு காபோ அக்குழந்தைக்காய் பாடிக்கொண்டிருக்க, நிறைகிறது ஒரு காட்சி.

(5)  குழந்தைக்குப் பால் கொண்டு வருகிறான் பிப்பிக். அவன் சகா அது எங்கிருந்து வந்தது எனக்கேட்க- ’மூ மூ ’ என மாடு போல் கத்திக் காண்பிக்கிறான். அச்சத்தம் கேட்டதும் குழந்தை திடீரென சிரிக்க ஆரம்பிக்கிறது.  படத்தின் பாதியில் வரும் இக்காட்சியில்தான் புன்னகை என்ற ஒன்றை , முக்கால் மணி நேரத்தில் எந்த முகத்திலும் நாம் பார்க்கவில்லை என்ற ‘பளார்’ தருணம்.

(6) சுரங்கத்துக்குள் காத்துக்கொண்டிருக்கும் பிப்பிக், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். ஒரு இடத்தில் குழந்தையை ஒளித்துவைத்துவிட்டு, உணவு தேடிச் செல்கிறான். திரும்ப வந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது. வெளிச்சத்தின் விளிம்பில் அந்தக் குழந்தை நின்று கொண்டிருக்கிறது. அதன் முன்னே, அவனை விட பெரியதாய் ஒரு வேட்டை நாய்........திக் திக் தருணங்கள். 


  ஒரு யூதக் குழந்தையை மையமாகக் கொண்டாலும், கம்யூனிசப் பார்வையில் கதை படைப்பு.
ஒரு சாரார் எல்லோருமே நல்லவர்களாகவும், பாசமும் ஈரமும் நிறைந்தவர்களாகவும். கொள்கைப் போரளிகளாகவுமான காட்சிப் படைப்புகள் ஒரு சார்புடைய நிலைமையைக் காட்டுகிறது. (மூலக் கதைக் கருவிலிருந்து பிசகாமல் இருக்கிறது. )

பிப்பிக்காக ஃப்ளோரியன் ஸ்டெட்டெரும், ஹோஃபலாக பீட்டர் ஷ்ணைடரும் - அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.


ஹோலோகாஸ்ட்டைப் பற்றி நீங்கள் பார்க்கும் முதல் படம் இதுவெனில், நான் மேலே குறிப்பிட்ட 5 திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.



சந்திப்போம், அடுத்த சினிமாவுடன்.


- சகி


குறிப்புகள் - 

நாஜி - ( Nazi) - ஆங்கில உச்சரிப்பு ‘ நா-ட்-ஸீ’)  - National Socialist German Workers' Party-ன் சுருக்கம். 1920 - 1945 வரை ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் இயங்கிய அரசியல் கட்சி.

S.S - (Schutzstaffel) - நாஜிக்களுடன் இணைந்து செயல்பட்டு, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற தனிப்படை. உலகப் போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்ட பின், சர்வதேச இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு குற்ற அமைப்பாக அறிவிக்கப்பட்டது. போரின் உச்சத்தில், 1 லட்சம் பேர் கொண்ட அமைப்பாக இருந்தது.


Friday, December 25, 2015

’எல்லி’யில்லாப் பயணம்


சில சினிமாக்கள் மொழிகளைத் தாண்டி நம்மை ஈர்க்கும்.  இன்னும் சிலவற்றில் சினிமாவே ஒரு மொழியாய் மாறி நம்முடன் உரையாடும்.  Netflix புண்ணியத்தில்  - எல்லியைப் பற்றி ( About Elly)  நான் சமீபத்தில் பார்த்து ரசித்த பிரமித்த, இரண்டாம் வகை படம். 

 இரானிய இயக்குனர்  அஸ்கர் ஃபர்ஹாதி யின் நான்காவது படம்.  நாற்பதின் முதிர்ச்சி தெரிகிறது.
2009-ல் வெளியீடு.






(1) நடுத்தர மக்களின் மனப்போரட்டம் (2) உளவியல் த்ரில்லர்  (3) உண்மைக்கும் பொய்க்குமான தத்துவார்த்த தர்க்கம்  என மூன்று தளங்களில் பயணிக்கிறது. நம்மையும் அறியாமல் மூன்றும் சங்கமிக்கும் நேரத்தில் நமக்குள்ளே கேள்விகள் எழுகின்றன.   பொய்க்கு இருக்கும் வலிமை உண்மைக்கும் இருக்கிறதா?  புரைதீர்ந்த நன்மை பயக்குதற்காக சில நேரங்களில் சொல்லப்படும் பொய்கள், நேர நீட்சியில் பயன்  நீர்த்து, வெறும் பொய்யாய்த் தெரிந்திடுமா?

மூன்று நடுத்தர தம்பதிகள், வார விடுமுறைக்காய் ஒரு கடற்கரையோர பங்களாவிற்குச் செல்கின்றனர்  - 1) ஆமிர், மனைவி செப்பிடே, குழந்தை   2) பேய்மன், மனைவி ஷோரே, இரண்டு குழந்தைகள்  3) மனுசேர், மனைவி நாசி. இவர்களுடன் ஜெர்மனியிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் அஹ்மத் விவாகரத்தானவன். இந்தக் குழுவின் நாடியாய், துடிப்புடன் செயல்படுபவள் செப்பிடே. அவள்தான் இந்த விடுமுறைக்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்கிறாள்.

அஹ்மதிற்குத் துணைசேர்ப்பதற்காகத் தன் குழந்தையின் பள்ளி ஆசிரியையான எல்லியையும் கூட அழைத்து வருகிறாள் செப்பிடே. முழுதாக விருப்பமில்லாமலும், சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், தயக்கத்துடனே வருகிறாள் எல்லி. 

அவர்கள் தங்குவதாக இருந்த பங்களா கடைசி நொடியில் கிடைக்காமல் போகிறது. வேறு வழியின்றி, வந்திருப்பது திருமணமான புது தம்பதி யென்றும், இதுவே அவர்கள் வெளியே செல்லும் முதல் முறையென்றும் பொய் சொல்கிறாள் செப்பிடே. இரானிய சமூகத்தில் மணமாகாத பெண்கள் குறித்த பார்வை நம்மூரை நினைவுபடுத்துகிறது.  

கடல் பார்த்த ஒரு பழைய பங்களா கிடைக்கிறது. அழுக்கான இடம், கதவுகளோ, ஜன்னல்களோ சரியில்லை. வேறு வழியின்றி தங்குகிறார்கள். சரியாக மூடமுடியாத கதவுகளால், அலைகளின் ஓசையே இசையாய் படம் நெடுக.   நண்பர்கள் இணைந்து ஆட்டமும், விளையாட்டுமாய் பொழுது கழிகிறது. புதுத் தம்பதிக்காய் மெத்தைகள் எடுத்து வரும் வீட்டம்மா, எல்லியையும், அஹ்மதையும் பார்த்து பாட்டொன்று பாட, என்ன செய்வதென்று தெரியாத எல்லியின் திகைப்பும், அஹ்மதின் குறும்புப் பார்வையும் அழகு. 

மறுநாள் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகும் எல்லியை, தடுக்கிறாள் செப்பிடே. வற்புறுத்தி தங்கச் சொல்லிவிட்டு கறிகாய் வாங்க கடைக்கு ஷோரேவைக் கூட்டிக்கொண்டு போகிறாள். ஆடவரெல்லாம் வாலிபால் ஆடிக்கொண்டிருக்க, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்வேலை பார்க்கச் செல்கிறாள் நாசி.

பேய்மனின் மகன் ஆரஷ் கடலில் மாட்டிக்கொள்ள, படம் வேறு வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. பெரும் பதைபதைப்புக்குப் பின்னர், குழந்தையைக் காப்பாற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டால் - எல்லியைக் காணவில்லை.  எல்லி என்ன ஆனாள்? இந்நிகழ்வால் அக்குடும்பங்கள் படும் மனக்கிலேசங்கள், பொய்க்கும் உண்மைக்குமான தத்துவார்த்த வாதங்கள் என பிரயாணிக்கிறது. முதல் பாதி சொகுசு காரிலும், இரண்டாம் பாதி நாஸ்காரிலும் !!!
கதைசொல்லி உங்கள் அனுபவத்தில் மண்ணள்ளிப் போட விரும்பவில்லை. 

பின்னணி இசையே இல்லை.  இயற்கையின் இசையே படம் முழுதும்.  மனத்தின் ஒசைகளும் சேர்ந்துகொள்ள, கடல் இசைக்கிறது - சிம்பிளாய் ஒரு சிம்பொனி.

அனைவருமே நடிப்பில் பின்னியெடுத்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்ல - செப்பிடேவாக -’ கோல்ஷிஃப்டே ஃபராஹானி - ஆரம்பத்தில் பூரிப்பும்,  நடுவே குழப்பமும், பின்னிறுதியில் பதைபதைப்பும் - பிரமிப்பு.

அஹமதாக - ஷஹாப் ஹொஸ்ஸெய்னி - வட இந்திய ஸ்டார் நடிகர் போன்று இருக்கிறார். ஆனால் என்ன - நடிக்கிறார். நெகிழ வைக்கிறார். கதை நடக்கின்ற வீட்டுக்குள்ளும் வெளியேயும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டதைப் போன்று, உறுத்தாத ஒளிப்பதிவு - ஹொஸெய்ன் ஜஃபாரியான்.

மொத்தத்தில் - கண்டிப்பாய் பார்க்க வேண்டிய - முடிந்தால் நமக்கென்று ஒரு  DVD ( ஒரிஜினல் தாங்க..) வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய படைப்பு.

ஸார் - நீங்க என்ன இரானியன், இத்தாலியன் படம்தான் பாப்பீங்களோ! அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்ற கேள்வி பின்னாலிருந்து.

இல்ல சார். ஒரு மாசத்துக்கு முன்னாடி ‘புலி’யும், ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘வேதாளமும்’ பார்த்தேன்.  இன்னும் அதுலேந்து மீளலை. நம்ம கடைல எல்லாம் ஓடும்.  என்ன .... என்னைக்காவது ஒரு நாள் தமிழ்லயும் நல்ல படம் வராமலா போகும். 

அடுத்த படைப்புடன் சந்திப்போம்.

-சகி




Wednesday, December 23, 2015

தீயில் கருகாத தாள்கள்




வீட்டுக்குள் அமர்ந்திருந்தேன்
வெளியெல்லாம் பனி
உள்ளெல்லாம் நெருப்பு.

வெறுமையில் நான்,
இரண்டு நாற்காலிகள்
60 புத்தகங்கள்,
எல்லாம் தனிக்கதைகள்.
பாதி முடிந்த பாட்டில்,
எரியட்டுமா வேண்டாமா வென்ற
கேள்வியுடன் அரைநூற்றாண்டுக் கணப்படுப்பு.

நீரில் எடை குறையத்தானே செய்யும்?
அறிவியலுக்கு அறிவில்லையா?
கண்ணீரில் எடை கூடத்தான் செய்தது.

கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன்
ஒரு காதல் கதை.
வீடுமட்டுமல்ல, ஊரையே எதிர்த்து
கோடுதாண்டி கோவில்சென்று
தாலிகட்டி
முடிக்காத கோடிவீட்டு மாடியொன்றில்
குடியேறி, காதல் சமைத்து,
 வியர்வையில் தாளித்துத்
தாமே உணவாய் ஆன கதை

பிடிக்காத பக்கங்களைக்
கிழிக்கத் தொடங்கினேன்
எரியிலிட்டு
அழிக்கத் தொடங்கினேன்

சோதியாய் எரிந்தது
ஆனால் காகிதம் விரிந்தது
எழுத்துக்கள் பெரிதாயின
என்னைப் பார்த்துச் சிரித்தன

வேறொரு புத்தகமெடுத்தேன்
ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்க்
காதலின் விளைவுகள்,
வாழ்வின் வளைவுகள்
சொல்லும் பக்கங்களை
அறவே வெறுத்தேன்
கையாலறுத்தேன்
தீயிலிட்டேன்.

அவையும் அங்ஙனமே.


மூன்றாவதாய் ஒரு புத்தகம்
மக்களெல்லாம்
திசைக்கொருவராய்ச் சென்றபின்பு
எண்திசையும்
அவளேயென அவனும்
அவனேயென அவளும்
வாழ்வின் சித்தரிப்பு.
கணநேரம் தாங்கவில்லையெனக்கு.
கிழித்தெரிந்தேன்.

கனலில் விஸ்வரூபமெடுத்தன
தாள்கள்.

ஆச்சரியத்திலாழ்ந்த எனக்கு
எதுவும் புரியவில்லை

அறுபது புத்தகங்களும்
என்னைச் சூழ்ந்தன
என் அறையைச் சின்னதாய் ஆக்கின

புத்தகச் சுவர்களாலான அறைக்குள்
அடக்கமானேன்
அப்புத்தகங்களினூடே ஒரு
வார்த்தையாய்த்
தொலைந்து போனேன்.


-சகி




Tuesday, December 22, 2015

அவனுக்கு இரைச்சல் பிடிக்கவில்லை



ஒரே இரைச்சல்!!!
பாலுவுக்கு எரிச்சலாயிருந்தது..
ரயில்வே ஸ்டேஷனருகே அவர்களது வீடு.
கூட்டத்துக்கும், சத்ததுடன் வரும்
ஆட்டத்துக்கும் பஞ்சமில்லை.

பழுப்பேரிய அறைச்சுவரில் மாட்டிய
ஓரத்தில் கிழிந்த காலண்டரில்
கிரிக்கெட் மாட்ச் தேதிகளும்
பால், மளிகை கணிதங்களும்.

ஒற்றை அறை வீட்டில் ஆறுபேர் வாசம்.
கடைக்குப் போவதுமுதல்
கக்கூஸுக்குப் போவது வரை
நீயா-நானா சண்டை.

இவர்களுக்கெல்லாம் காதே கேட்காதா?
அவ்வப்போது வியப்பான்.
எதிரேயிருந்த மைதான ஓரத்தில்
போனால் போகிறதென்று விட்டுவைத்த
கொய்யா மரம்தான் அவன் போதிமரம்.
இரவுணவுண்டபின் பத்து நிமிடமாவது
அவன் அங்கே அமர்வான்.
கேட்டதெல்லாம்
தெருநாய் சத்தமும், அவ்வப்போது கேட்கும்
ஆட்டோ சத்தமும்.
இரைச்சல்களிலிருந்து விடுதலைபெறும்
அந்த பத்து நிமிடங்களுக்காய் மற்ற மணித்துளிகளை
அவன் வெறுமனே புரட்டினான்.

நான்கு தினங்களாய்
அவனுக்குத் தெரிந்த யாரையும் காணவில்லை.
திடீரென வெள்ளம் வந்தபோது,
கொய்யா மரத்தருகே இருந்தவன்,
மரத்திலேறி அமர்ந்துகொண்டான்.
கிரைண்டர் மாவைப்போல்
சுழித்துக் கொண்டோடியது தண்ணீர்.

‘அய்யோ!!!காப்பாத்துங்....”-
இரண்டுபேர் சுழிக்குள் தொலைந்தனர்.
கண்மலங்கப் பார்த்தான், கிளையைப் பற்றியபடி

ரெஸ்க்யூ போட்டில் வந்தவர்கள் இவனைப் பார்த்தனர்.
 இறக்கி அவனை ஒரு பள்ளிக்கூடத்தில் விட்டனர்.

ஆயிரம் பேருக்கு மேல் இருந்தனர்.
ஆனால் குரல்கள் கேட்கவில்லை.
எல்லாமே இழந்த முகங்கள்,
சோகம் இழைந்த முகங்கள்.
ஒலியேதும் கேட்கவில்லை.

மௌனத்தின் இரைச்சல், அவன் காதுகளுக்குள்.
அவனுக்கு இரைச்சல் பிடிக்கவில்லை.

- சகி



Monday, December 21, 2015

கமண்டலம்


நீரை பிளாஸ்டிக்கில் அடைக்க நினைத்தோம்
பிளாஸ்டிக் நீரை அடைத்தது...
கூடவே
பலரை வீட்டுக்குள்ளும்
சிலரை மண்ணுக்குள்ளும்...

விளிம்பில் வழியும் எண்ணங்கள்




 அடுப்பில் பால் கொதித்துக்கொண்டிருந்தது...
 நுரையாய் அவள் எண்ணங்கள்

  இதுதான் தருணமா?
    முடிவு சரியாய் இருக்குமா?
      அவனாதிக்கம் மனம் பூராவும்

இன்னும் நுரைக்க ஆரம்பிக்கவில்லை..
  சூட்டை அதிகமாக்கினாள்

    அப்பா என்ன சொல்வார்?
       அம்மா என்ன செய்வாள்?
         அக்கா கல்யாணம் நின்றுவிடுமா?
           இன்னும் பொறுக்க வேண்டுமோ?


காற்றுக் கொப்பளங்கள் தெரியத் தொடங்கின
அவள் கை பாத்திரத்தின் பிடியில் இறுக்கமாய்

   இன்று சொல்லவில்லையானால்
      எங்கோ போய்விடுவானோ?
      விளிம்பிலிருந்தாள் விடைதெரியாமல்

பாலும் பொங்கியது.


- சகி







Saturday, December 19, 2015

அண்ணாமலை - பாகம் 3


வாய்பிளந்த பெருவண்டி வீடிடித்தது

உலகுண்ட  உத்தமன்போல்-  அதன்
வாயெல்லாம்  மண்ணும்  கல்லும்

தாயும்  தன்னவளும்  திருவிழா  சென்றிருக்க
வாயும்  கண்ணுமே  அவனிடத்தில் அவலம்சொல்ல

பயிர்  செய்ய  உழுதற்குமில்லை
 மயிர்நீத்து  தொழுதற்குமில்லை
  உயிர்காத்து  விழுதற்குமில்லை-  மழை
    அவனொடு  அழுதற்காய்ப்  பெய்தது
     அவன்  நெஞ்சு  எழுதற்காய்ப்  பெய்தது

நஞ்சுகுடித்தவன்  போல்  துடித்தான்
நஞ்சுகொடுத்தவன்பால்  வெடித்தான்

அவன்  வீடு  நோக்கி  நடந்தான்
பண  விலங்குறங்கும்
காடு  நோக்கி  நடந்தான்

இவன்  வரவுகண்டு  -  வீட்டின்  கதவுகூட  மிரண்டது
சாவியோ  முயற்சியோயின்றித்  தானாகவே திறந்தது




கர்ஜித்தான்...



"அடேய்......



  நீ  இன்று  என்  வீட்டை  இடிக்கவில்லை
  நட்பெனும்  கூட்டை  இடித்தாய்
  தன்மகன்  முன்னிலும்  பின்னிலும்  உன்னையே
  'என்மகன்'  என்றவள்  பாட்டை  இடித்தாய்
  உன்நகம்  ஓர்திரி  வெளியே  வளர்ந்தாலும்
  தன்னகம்  குதித்து  மின்னலென  வெட்டிடும்
  தங்கையவள்  மனக்கோட்டை  இடித்தாய்

  காசில்லை  என்பதனால்  தூசாகிப்போனேனோ?
   தனகனமில்லை  யென்பதனால்  லேசாகிப்போனேனோ?

  இன்றே  எழுதிக்கொள்....

     சில்லறையை  விட்டெறிந்து  வீட்டைத்  தகர்த்தவன்  நீ
      உன்  கல்லறை  வாசகத்தைத்  திருத்தச்சொல்...

     வீடிழந்து,  வாழ்விழந்து,  மனமிழந்து  நிற்கும் நான்
      வீழ்ந்து  போகமாட்டேன்  ;
       உன்னில்  தாழ்ந்து  போகமாட்டேன்

உன்  கர்வம்  கொல்வேன்;
      உனை  நின்று  வெல்வேன்

எனை  நண்பனாய்ப்  பார்த்தாய்;
          நற்பண்பனாய்ப்  பார்த்தாய்
      உனை  எதிர்க்கும்  புயலாய்ப்  பார்த்ததில்லை...

உன்னிலும்  பெரிதாய்....  மண்ணிலே  அரிதாய்
வையமே  போற்றும்  வணிகனாய்
வானமும்  போற்றும்  தலைவனாய்  மாறி...

உன்வசமுள்ள  அனைத்தும்  அழிப்பேன்
அதுவரை  எப்போதும்  விழிப்பேன்....விழித்தே கிடப்பேன்

     நீ  பலமிழந்து,  பணமிழந்து,  வளமிழந்து
      தரையில்  வீழ்ந்து
      மதியிழக்கும்  காலமும்  வரும்  -  உன்
      கதியிழக்கும்  நேரமும்  வரும்...

          இந்த  நாள்...உன்  ஏட்டில்  குறித்துக்கொள்

     இன்று....    இப்பொழுது...   இக்கணமே
      மாறப்போகிறதுன்  இலக்கணமே...

                                         தொடரும்.....

- சகி


ஆ!!!!!!!





ஆருயிர் பிரிந்து
ஆண்டொன்று
ஆயிற்று.

ஆசைகள் எரிந்து
ஆத்திரம் நிறைந்திட்ட
ஆட்களில்லா நேரத்தில்
ஆன்மாவின் வலி,
ஆயிரம் சத்ததுடன்....

ஆறுதல் சொல்ல
ஆருமில்லையென்றிருக்கையில்
ஆவியாய் வந்து சொன்னான்
ஆரூடமொன்று.

ஆண்டுமுடிவதற்குள்
ஆவன
ஆகுமென்றும்
ஆத்திரம் தீருமென்றும்...

ஆக்கமாய், ஊக்கமாய்
ஆசையின் தேக்கமாய்
ஆனந்தத் தூக்கமாய் என்னை
ஆக்கிரமிப்பானென்றும்...

ஆழ்ந்த மௌனத்தையும்
ஆர்ப்பரிக்கும் அரற்றலையும்
ஆராய்ந்தால் தெரிவது அவனேயென்றும்...

ஆகச்சிறந்த செய்திகேட்டு
ஆவலில் நான்...

-சகி

சுமை




சுமை


கனமின்றிச் சுமப்பது
கருவில் மட்டுந்தான் போலும்..
கருமத்தின்
கட்டாயங்கள் 
கனமானவை.
கட்டுக்கடங்கா
கண்ணீர்மல்கும்
கணங்களில்
கவிதைகளே
காப்பு.
கற்பனைக்
கைகள்
கொண்டவை
கண்ணீர் துடைத்த
கணங்களில்
கருவிலே மீண்டும் நாம்
குழந்தைகளாய்...

-சகி

Monday, December 14, 2015

அண்ணாமலை - பகுதி - 2




திடீரெனத்  திரையும் திறந்திடத்
திடுக்”கெனத்  திகைத்தான்
முழுவதும்  கண்டதும் முழித்தான்
கற்பனைச்  சேலை  கொடுத்தான்
கலங்கியபடி  கடவுளை அழைத்தான்

பாராததைப்  பார்த்ததும்
பாவைக்கு  பார்த்தவன்  பார்த்தனானான்  -  அவள்
மனப்பூவைக்  கோர்த்தனானான்

தாயின்  தங்கையின் தோழனின்
தாள்பணிந்து  தங்கமவள் தரமுறைத்து
தோள்பற்றித்  தலைவனானான் - அவள்  தஞ்சத்தில்
தொலைந்து  போனான்


ஆமகன்  நிலமொன்று இருந்தது
ஆக்களின்  நிலமாய்  இருந்தது
ஆதியிலிருந்தே  இருந்தது  -  அதில்
ஆவியாய்  தந்தையுயிர் திரிந்தது

நண்பனின்  தந்தையோ  பொல்லாதவன்
நல்வழிப்  பாதையே  செல்லாதவன்
நல்லதாய்  ஒருமொழி  சொல்லாதவன்
நன்றியைக்  கடுகுக்கும் கல்லாதவன்

மந்திர  விடமெனும் விதையைத்தான்
மகனின்  மனத்தில் விதைத்தான்
மகனும்  மண்தேடி விரைந்தான்
மண்மகன்  கண்தேடி விழைந்தான்

தன்  லாபத்துக்காய்  இல்லாமல்
நண்பனின்  ரூபத்துக்காய்ச் சம்மதித்தான்
ஒன்றுமில்லா  வானத்தில்,  வட்டநிலா  விளைந்ததுபோல்
வார்த்தையொன்றுமில்லாக் காகிதத்தில்
கைவிரல்  பொதிந்து  தந்தான்

நாளும்  நகர்ந்தது
நண்பனின்  கட்டிடம்  உயர்ந்தது

அன்றுதான்  திறப்புவிழா  -  நண்பனின்
வாழ்வில்  சிறப்புவிழா

செல்வரும்  வந்தார்  -   அரசியல்
கள்வரும்  வந்தார்
கள்  தரும்  பணத்தைக்
கொள்வரும்  வந்தார்

இல்லாதான்  இவனொருவன்தான்-  கர்வம்
இல்லாதான்  ஒருவனேதான்
எல்லார்முன்னும்  தெரியாமலிருக்க
பொல்லார்  செய்தார்  ஒருவேலை

அழுக்கு  மனம்  கொண்டவர்
அழுக்கு  செய்தார்  தரையை
இழுக்கு  வரும்  நண்பனுக்கென்று
இழுத்துவந்து  துடைக்கச்செய்தார்  இவனை

ஆசையாய்த்துடைத்தான் இவனும்
பூசைக்கடவுள்  இருப்பிடம்போன்று
மேசைக்குப்  பக்கத்தில்  கேட்டான் பேச்சு
மீசை  துடித்தது  அவனுக்கு

மாளிகைக்குப்  பக்கத்தில்  குடிசை ஒவ்வாதாம்
நாழிகைக்குள் காலிசெய்ய அவர்செய்யும்  ஏற்பாடாம்
தூரிகைக்  காகிதமோ  சட்டென்று கிழித்தெறிய?
காரியத்தைக் கேட்டதுமே கோபத்தில்  கேட்டும்விட்டான்

நண்பனின்  தந்தைக்கும் இவனுக்கும்  வாதம்
அன்பில்லை யாதலால் நட்புக்குச் சேதம்

ஒருநொடியில்  மனம்  பிறழ்ந்தான்
ஒருகணமே  அறிவிழந்தான்
கார்காலக்  கறுவிருட்டில்
பார்த்தாலே  மறைகின்ற  மின்னலென
தன்கரம்  அவர்கன்னம் அறைந்துவிட
தானே  அதிர்ச்சியில் அதிர்ந்து  நின்றான்

தந்தையின்  அவமானம்  தான்கண்டு  நண்பனும்
சிந்தையில்லாமலே  அவனை  அறைந்தான்
கந்தையுடுத்தும் நிலையிலும் விடாத நண்பனை
விந்தையுடன் பார்த்து வெளியேறினான்  வெண்மனத்தான்

பீடுவந்தான்  .....  வீடுவந்தான்
தன்வில்லே  தனைத்தாக்கிய வேடுவன்தான்
முகம்புதைக்கத்  தாய்மடியைத் தேடிவந்தான்

நண்பனுக்கோ  கோபமின்னும் ஆறவில்லை
தந்தைபட்ட  அவமானம் மாறவில்லை

மண்வீடு..அந்த  மன்வீடு..அதைத்
தன்வீடாய்க்  கருதிய  பொன்வீடு
தந்தையின்  துயர்போக்க  இடிக்கத் துணிந்தான்
தன்  நட்புக்கு  இரங்கல் படிக்கத் துணிந்தான்


....தொடரும்

-சகி 

அண்ணாமலை - பகுதி -1


                                       


துணைக்குத்  தோள்தருவான்
பாசத்துடன்  பால்தருவான்
பதிலுக்குக்  காசெல்லாம்  எண்ணாமலை  -  இவன்
ஊரிலுள்ள  தம்பிக்கெல்லாம்  அண்ணாமலை

சேறடித்த  காரின்மீது  கல்லடித்த  பின்னே
வேர்பிடித்த  நட்பு  என்றும்  வீற்றிருந்ததென்ன
பார்படித்த  நண்பன்  செல்வமாளிகையில்  மின்ன
தேர்பிடித்த  தெய்வம்போல  நெஞ்சிலாழ்ந்ததென்ன

பேர்தருவார்  சீர்தருவார்
ஊர்தருவார்  வேர்தருவார்
தேர்தருவார்  பார்கூடத்தருவாருண்டு
ஆர்தருவார்  இவன்போலன்பை?
ஆர்பெறுவார்  இவன்போல்பண்பை?

தாயொடு  தங்கைசூழ,  தங்கிடும்  அன்புசூழ
தனமின்றி  வாழ்ந்தாலும்-  மன
கனமின்றி  வாழ்ந்தான்  இந்த  ஆமகன்..
கவலையில்லாக்  கோமகன்

நண்பனின்  காதல்கண்டு
நட்புடன்  பொறுப்பும்கொண்டு
வைவதுபோல்  வைதுவைத்தான்  -  பின்
தன்னாசி  பெய்துவைத்தான்

கல்லூரிப்  பெண்ணொருத்தி
கள்ளூறும்  கண்ணகத்தி
நில்லாமல்  செல்கையிலே
கல்லாதான்  இவனைக்கண்டாள்

கண்ணணாய்  ஒருநாள்  கண்டாள்
மன்னனாய்  மறுநாள்  கண்டாள்
'என்ன  நான்  செய்வேனென்று'
சின்னதாய்க்  குழப்பம்  கொண்டாள்

பால்கொண்டு  செல்கையிலே
பாம்பின்பால்  பயம்கொண்டு
பார்க்காத  திசையெல்லாம்  ஓடினான்
பாவையவள்  குளியலறை  நாடினான்...

                                                    தொடரும்...

-சகி     

அண்ணாமலை - அறிமுகம்




படிக்கத் தூண்டும் எழுத்துக்கள் எவ்வளவோ இருக்க, நம்மை எழுதத் தூண்டும் எழுத்துக்கள் சிலவே.

என்னை ஈர்த்த கவிஞர்களில், வாலி அவர்களுக்குத் தனி சிம்மாசனமே உண்டு. அது அனுமன்போல் தானாகவே இட்டுக்கொண்டு அமர்ந்த வாலாசனம். வாலியாசனம் என்றே கொள்ளலாமே !!!

வார்த்தைகளால்
விதையை
விருட்சமாக்கும்
வித்தைசெய்து
வலிமைமிக்க
வாக்கியங்கள்
வார்த்து
வியக்க
வைத்தவர்
வாலி.

அவர்பால் ஏற்பட்ட ஈர்ப்பு -
அதனால் இந்த கோர்ப்பு.

காப்பியங்களைக் கோர்ப்பது- அம்மகானுக்கே சாத்தியம் - அவரைக்
'காப்பி' - அடிக்காமலிருப்பதரிது- நானறிந்த சத்தியம்.

               
நரைதாடிக் கவிசொன்ன சூரியபரம்
பரைக் கதைகள் மத்தியில் - மக்கள்வென்ற
திரைக்கதையொன்றை மறுவடிவில்தர
அரைகுறையான ஆவலில்...

இதோ உங்கள் முன்னால்.....

அண்ணாமலை.

Sunday, December 13, 2015

சாமானியன்




நலிந்தவன்  கதைகேட்டாய்- 
நல்ல  கண்ணீர்  இரண்டுசொட்டு 
இழந்தவன்  மொழிகேட்டாய்- 
     இடிநெஞ்சில்  இறங்கியது 

மணல்கொள்ளை  பயங்கரம்- 
     மனதால்  வைதாய் 
மழலைப்பெண்  வன்புணர்ச்சி- 
     மழையாயின  கண்கள் 

சுரங்கத்தில்  சுரண்டல்- 
     அரண்டே  போனாய் 
சூடானில்  கலவரம்- 
     சத்தியமாய்க்  கலங்கினாய் 

ஏர்முனையில்  கிழவன்  கதறல்- 
     ஏனென்று  உனக்குள்  கேள்வி 
போர்முனையில்  சிப்பாய்  செத்தான்  - 
     பொரிந்து  தள்ளினாய் 

யார்வந்து  தேற்றுவார்கள்- 
     யார்வந்து  மாற்றுவார்கள் 
பார்வைக்குத்  தெரியாத  நல்லவனை  நினைத்துப் 
போர்வைக்குள்  நீ  தூங்கிப்போ!!! 

-  சகி 

கவலை





நகர்ந்தமர்க!!!  என்றாளவள்.... 
      
 கோப்புகள்  மறந்து 
 கோபிக்கும்  மேலாளர்தமை  மறந்து 
கூடியிருக்கும்  நண்பர்மறந்து 
 கால்கடுக்கக்  காத்திருந்து 
 'கார்த்திக்'  திரையரங்கில் 
  காதலி   கைப்பிடிக்கக் 
   காலியிடம்  தேடியமர்ந்தால்... 

நகர்ந்தமர்க!!!  என்றாளவள்.... 

 எத்தனை  தடங்கள்-  அதில் 
 எத்தனை  தடங்கல் 
    
அக்காவைப் பார்க்கவந்த கூட்டம்தாண்டி
அகிலாவின் அலைபாயும் கண்கள்தாண்டி   
அம்மாவின் ஏசல்கள் எல்லாம்தாண்டி
அத்தானின்  விரல்பிடிக்கும் 
       கனவெண்ணிப் போகையிலே.                                           
  மூன்றுமணிப்  படத்துக்குமுன் 
          மூன்றுநாள்  தொல்லை... 

நகர்ந்தமர்க!!!  என்றாளவள்.... 

          நகர்ந்தான்.... 

          இருவருமே  அங்கலாய்க்க 
          இருதிசையில்  தலைகள்சாய்க்க 
          இருக்கையில்  அமர்ந்திருந்த 
          எறும்பொன்று 
          காதலனின்  காலிடுக்கில் 
          மாட்டி  மடிந்திட்ட 
          தன்சோடி  முகம்பார்த்துக் 
                                                  கலங்கிற்று... 

          அவரவர்  கவலை  அவர்க்கே!!!!! 


-  சகி